“ வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களில் பலர் “நுண் கடன்’ வலையில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். இம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, அரசு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. சில குழுக்களைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் சுய தொழில் செய்து வருவாய் ஈட்டி கடனை அடைக்கின்றனர். இந் நிலையில், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்திலிருந்து வேலூர் மாவட்டத்துக்குள் 5-க்கும் மேற்பட்ட நுண்கடன் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் குடியாத்தம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களைத் தங்களது வலையில் சிக்க வைத்துள்ளன. எதையும் ஈடாகப் பெறாமல், ரூ.8 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உடனடியாகக் கடன் கொடுக்கின்றன. அதற்குத் தேவையான ஒரே தகுதி, மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவராக இருந்தால் போதும். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை நகல்கள், தம்பதி புகைப்படம் ஆகியவற்றை அளித்தால் கடன் கிடைக்கும். கடன் அளிக்கும்போது கடவுளின் மீது சத்தியம் செய்யக்கூறி, பணத்தை வழங்குகின்றனர். வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் சென்று தவணையை வசூலிக்கின்றனர். இந் நிறுவனங்களில் 15 பேர் அடங்கிய குழு கடன் பெற்றால், அனைவரும் அன்று ஆஜராக வேண்டும். குழுவில் ஒருவர் அந்த வார தவணையைச் செலுத்தாவிட்டால், அதை மற்றவர்கள் பங்கிட்டுச் செலுத்த வேண்டும். தொடர்ந்து 5 வாரம் செலுத்தாவிட்டால் வீட்டை பூட்டுவோம் என்பது உள்பட சில இந்த நிறுவனங்களின் விதிகளில் உள்ளதாம். கடன் தொகை அளிக்கும்போது, ஆவணங்கள் செலவு என ரூ.400 வரை பிடித்தம் செய்கின்றனர். வாரம் ஒரு முறை அசல், வட்டியோடு, வட்டிக்கு நிகரான தொகையை சேமிப்பு எனக் கூறி பெறுகின்றனர். 50 வாரக் கடன் எனக்கூறி, 45 வாரத்திலேயே, சேமிப்பு தொகையைக் கைப்பற்றிக் கொண்டு அசலில் இருந்து கழிக்கின்றனர். இதுபோன்று பல்வேறு “தந்திரங்’களை இந் நிறுவனங்கள் கையாள்கின்றன. ஆனால், மகளிரிடம் இருந்து பெறும் சேமிப்புக்கு இந் நிறுவனங்கள் வட்டி தருவதில்லை. மேலும், ஓராண்டுக்கு எனக்கூறி 20 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் இந் நிறுவனங்கள், முன்கூட்டியே சேமிப்பைக் கையகப்படுத்தி கடன் தொகையை 10 மாதங்களில் நிறைவு செய்து விடுகிறது. இதன் மூலம், இந் நிறுவனங்களுக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது. மொத்தத்தில், 10 மாதங்களுக்கு இந் நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டியைக் கணக்கிட்டால் 26 முதல் 28 சதவீதம் வரை வரும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர். இவ்வாறு கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.” (திணமணி செய்தி)
” தர்மபுரி மாவட்டத்தில், நுண் கடன் நிறுவனத்தில் கடன் பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், வட்டி கட்ட முடியாமல் திணறி வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில், கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் 1,400க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்த குழுக்கள் மதி மற்றும் நான்மதி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதை தவிர பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவி குழுக்களும் இயங்கி வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான வங்கிக்கடன் மற்றும் சங்க கடனுதவி, தொழில் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றை வழங்கி, மகளிர் சுய உதவி குழுக்களை நிர்வகிக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள 16க்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இத் தொண்டு நிறுவனங்கள் போதிய நிதி ஆதாரத்தை சுய உதவிக்குழுக்களுக்குப் பெற்று தர முடியாத நிலையில், நுண் கடன் நிறுவனங்கள் மகளிர் குழுக்களின் தலைவிகளிடம் பேரம் பேசி, குழுக்களுக்கு தேவையான நிதியை தங்கள் நிறுவனங்களிடமிருந்து பெற்றுகொள்ள குழு உறுப்பினர்களிடமிருந்து ஒப்பந்தம் செய்யப்படுகிறது. 1,500 ரூபாய் கட்டினால், ஒரு லட்சம் ரூபாய் வரை கடனுதவி என கூறி, மாவட்டத்திலுள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்த 15 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளது.
அதிக கடனுதவி கிடைக்கும் ஆசையில், குறைந்த முன் பணத்தை கட்டி நுண் கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று கொள்கின்றனர் மகளிர் சுய உதவிக்குழுக்கள். ஆனால், கடனுக்கு நுண் கடன் நிறுவனங்கள் மீட்டர் வட்டி வசூலிக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில், அசல் பங்கு தொகையை செலுத்தவில்லையென்றால், வசூலிக்கும் வட்டி விகிதம் இரண்டு மடங்காகவும், தாமதமாகும் ஒரு வாரத்துக்கு அசல் தொகையில் ஐந்து சதவீதம் வட்டி என, வசூலித்து நூதனமாக ஏமாற்றுகின்றன. அதனால், குறிப்பிட்ட காலத்துக்குள் அசல் தொகையை கட்ட முடியாத மகளிர் சுய உதவிக்குழுக்களும், கடன் வாங்கும் குழுக்களும் மீட்டர் வட்டியை கட்டமுடியாமல் திணறிவருகின்றன.(தினமலர் செய்தி)
மேற்கண்ட இரு செய்திகளும் நாளிதழ்களை வாசிக்கும் போது கண நேரத்தில் வந்து சென்றவை. இன்றைய நமது தேசத்தின் மிகப் பெரிய பிரச்சனைகளுக்கு மத்தியில் இச்செய்திகள் மிகச் சாதாரணமாவை. ஆனால் எதிர்காலத்தில் ஒட்டு மொத்த தேசத்தின் பார்வையை ஈர்க்கும் சக்தி இந்தச் செய்திகளுக்கு உண்டு. ஆம். நாடு முழுவதும் நுண்கடன் நிறுவனங்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நிதி நிறுவனங்களை நடத்துவதிலும், பைனான்ஸ் தொழில் செய்வதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும், வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும், சமூக மற்றும் அரசியல் பின்புலம் உள்ளவர்களும், பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து உருவாக்கிய அமைப்புகள்தான் நுண்கடன் நிறுவனங்கள் எனும் கடன்காரப்பேய்கள். இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள இந்த நிறுவனங்கள் தேசம் முழுவதும் தங்களின் ஆக்டோபஸ் கரங்களை விரித்து அப்பாவி மக்களை கடன் வலையில் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு மாவட்டத்தில் நுழையும்போது, அந்த மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன தொண்டு நிறுவனங்களை தங்களின் மாய வார்த்தைகளால் மயக்கி கபளீகரம் செய்து கொள்கிறார்கள். ஆர்வக் கோளாறில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி தங்களை தொண்டு நிறுவனங்களின் தந்தைகளாய் பிரக்கடனம் செய்து கொள்பவர்களால் தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்களை வழி நடத்த முடியாத சூழலில் நுண்கடன் நிறுவனங்களின் காலடியில் விழுந்து விடுகிறார்கள். (இப்படித்தான் பிரிட்டிஷ்காரனிடம் நமது குறுநில மன்னர்களும் சரணடைந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது)
இன்றைய மின் பற்றாக்குறையால் வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு ஆலைமூடல், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக நகர்ப்புற வர்க்கத்திடம் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக சந்தையின் அளவு எதிர்பார்த்த மாதிரி விரிவடையவில்லை. இந்தப் பின்னணியில் பல பன்னாட்டு நிறுவனங்கள் நகர்ப்புறத்தில் புதிய நுகர்வோர்களை கவர்ந்திழுக்க முடியாமல் புதிய களங்களைத் தேட ஆரம்பித்தன., கடந்த பத்தாண்டுகளாக பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வெறிக்கான புதிய இரையாக கிராமங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. அதற்காக அவர்கள் தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்ட நாமகரம்தான் நுண்கடன் திட்டம்.
நம் நாட்டின் 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையில், கிட்டதட்ட 75 கோடி மக்கள் கிராமங்களில் உள்ளனர். இம்மக்கள் 6.4 லட்ச கிராமங்களில் வசிக்கின்றனர். இதில், ஒரு லட்ச கிராமங்கள் 2000 முதல் 10,000 வரையும், 2.2 லட்ச கிராமங்கள் 500க்கும் குறைவான மக்கள்தொகையும் கொண்டவையாகும். முதலில் கூறப்பட்ட ஒரு லட்ச கிராமங்கள் ஒட்டுமொத்த கிராம மக்கள் தொகையில் 50 சதம் கொண்டதாகவும் 60 சதவீத கிராம பொருளாதாரம் கொண்டதாகவும் உள்ளது. அன்றாட மற்றும் துரித தேவையான பொருட்களான பற்பசை, சோப், பவுடர் போன்ற பொருட்களின் கிராமச் சந்தை மதிப்பு ரூ. 65,000 கோடியாகவும், டி.வி. மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற வகையறாக்களின் சந்தை மதிப்பு ரூ. 5000 கோடியாகவும், விவசாய இடுபொருட்களின் சந்தை மதிப்பு ரூ. 45,000 கோடியாகவும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன சந்தை மதிப்பு ரூ. 8,000 கோடியாகவும் உள்ளது. அதாவது, மொத்த இந்திய கிராமச் சந்தையின் ஆண்டு மதிப்பு ரூ. 1,23,000 கோடியாகும் இந்த பிரமாண்டமான சந்தையில் 35 முதல் 44 சதம் வரை மட்டுமே பன்னாட்டு மற்றும் இந்திய தரகு முதலாளிகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ( நன்றி. புதிய ஜனநாயகம்)
மீதியுள்ள சந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு தடைகள் இருக்கின்றன. குறிப்பாக, இந்திய கிராமங்கள் மிகவும் விரிந்து பரந்து பல்வேறு புவியியல் அமைப்புகளில் உள்ளன. மேலும் 30 சதவீத கிராமங்கள் சொற்பமான மக்கட் தொகையே கொண்டுள்ளது. சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. கிராம மக்கள், பாரம்பரியத்தாலும் உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தினாலும் பின்னிப் பிணையப்பட்டுள்ளார்கள்; அவர்களின் வாங்கும் சக்தி குறைவாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் குறைவு. விழிப்புணர்வை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. ஆனால், மக்கள் அல்லும் பகலுமாய் சுழற்சியாய் உழைத்துக் கொண்டு, பொருளாதாரத்தை ஈட்டி தமது தேவையை உள்ளூர் மற்றும் அருகாமையில் உற்பத்தியாகும் பொருட்களின் மூலம் ஈடேற்றிக் கொள்கின்றனர். இவ்வளவு சிக்கல்கள் இருப்பினும், இந்த ஏழை எளிய கிராம மக்களிடம் உள்ள சொற்ப செல்வங்களைக் கூட கொள்ளையடித்தே ஆகவேண்டும் என்கிற வெறியில், பன்னாட்டு நிறுவனங்கள் நுண்கடன் நிறுவனங்களாய் அவதரித்து வருத்தப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு அள்ளியள்ளித் தரும் திருப்பணியைச் செய்யத் தொடங்கியுள்ளன.
இந்தத் திருப்பணிக்கு பல்வேறு திறம்பட்ட கூட்டாளிகள் தேவைப்படுகின்றனர். கிராம மூலை முடுக்கெல்லாம் சென்றடைய சங்கிலித் தொடர் வலைப்பின்னலைக் கொண்ட அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தேவை; கிராம பாரம்பரியத்தையும் உழைக்கும் மக்களின் கலாச்சார பின்னணியையும் உடைத்தெறிந்து நுகர்வெறி கலாச்சாரத்தைத் திணிக்கக் கூடிய ஊடகங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தேவை. குறைந்த முதலீட்டை போட்டு அதிக லாபத்தை எடுக்க என்னென்ன அம்சங்கள் தேவைப்படுகிறதோ அவற்றை முடித்துக் கொடுக்கிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் கூட்டாளிகளாகத் தேவை. தங்களின் நம்பகமான, திறமையான கூட்டாளிகளாக தன்னார்வக் குழுக்கள், மகளிர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்த்துக் கொண்டன. இவர்களின் மேலான் ஊதவியோடு இவர்களுக்குக் கீழ்படிந்து நடப்பதற்காகவே சுய உதவிக் குழக்களை உருவாக்கும் பணியையும் செய்கின்றன.
பன்னாட்டு நிறுவனமான “”ஹிந்துஸ்தான் லீவர்” 2001ஆம் ஆண்டில் 4 மாநிலங்களில் 52 மாவட்டங்களில் உள்ள 5000 கிராமங்களுக்கு தங்கள் பொருட்களை விற்பதற்காக பல்வேறு தன்னார்வக் குழுக்கள் மற்றும் அதனின் சுயஉதவிக் குழுக்களுடன் கூட்டு வைத்து விற்பனையை ஒத்திகை பார்த்தது. இந்த வெற்றியின் பின்னணியில், இவ்வழி முறையை 8 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தி 130 மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்களை இந்நிறுவனத்தினர் சென்றடைகின்றனர். இத்திட்டத்திற்கு சுய உதவிக் குழுக்களிலிருந்து பெண்களை, தன்னார்வக் குழுக்களின் மேற்பார்வையில் தேர்ந்தெடுத்து பொருட்களை விற்பதற்கான பயிற்சியையும், சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் இந்நிறுவனத்தினர் கற்றுத் தருகின்றனர்.
பன்னாட்டு நிறுவனங்களின் உத்திரவாதத்தில் கடன் கொடுக்கவும் தங்களுடைய சேவைத் திட்டங்களை கிராமப்புறங்களில் விற்கவும் பல நிதி நிறுவனங்கள் புற்றீசல் போல் கிராமத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் இயங்கும் தன்னார்வக் குழுக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடைய நுண்கடன் சந்தையின் மதிப்பு 15 முதல் 45 ஆயிரம் கோடியாகும். இக்கடன்களை திருப்பிப் பெற்று தர, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் இருப்பதால் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது.
தன்னார்வக் குழுக்களோ, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்யக்கூடிய திட்டங்களுக்கு மட்டுமே உத்திரவாதம் தர முன் வருகிறது. அதாவது, கிராம இணைய நிலையங்கள் வைப்பதற்கும், பன்னாட்டு நிறுவன பொருட்களை விற்பதற்கும் சுய உதவிக் குழுக்கள் நுண்கடன்களை வாங்க உத்திரவாதம் கொடுக்கிறது. தன்னார்வக் குழுக்களின் பிரதான வேலை, அசலையும் வட்டியையும் கறாராகப் பெற்று நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்; அதாவது, அடியாள் வேலை!
உலக வங்கியின் வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி நூறுக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் போக்கில், நுண்கடன் உள்நோக்கங்களைப் புரிந்து கொண்ட டாக்டர் சுதிர்ரேந்தர் சர்மா, அவ்வேலையிலிருந்து விலகிக் கொண்டார். அவரின் கூற்றுப்படி, ‘நுண் கடன் என்பது செயற்கையான பணப் புழக்கத்தை ஏற்படுத்துகிறது; இந்த நுண் கடன் மூலம் பெரும்பான்மையான தன்னார்வக் குழுக்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொழுத்த இலாபத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறுகின்றன. மேலும் இந்நுண்கடன்கள், சமூக உணர்வு, அரசியல் விழிப்புணர்வு மற்றும் வாழ்வுரிமைப் பாதுகாப்பை அடியோடு அரித்து விடுகிறது; நுண்கடன் என்பது மாபெரும் சதி என்கிறார்.
இன்னொருபுறம், பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பொது மற்றும் ஆயுள் காப்பீடு சேவை திட்டங்களை கிராமங்களில் விற்கவும் முனைந்துள்ளன. குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற நிறுவனங்கள் புதிதாக களத்தில் இறங்கியுள்ளன. இந்நிறுவனம் பயிர் மற்றும் கால்நடை, மழை போன்ற காப்பீடுகளில் இறங்கியுள்ளது. ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டத்தில் மழைக்கான காப்பீடுகளை விவசாய அமைப்புகளிடம் விற்று ஒத்திகை பார்த்துள்ளது.
விவசாயம் போண்டியாகி வரும் பின்னணியில், எண்ணற்ற விவசாயிகள் தற்கொலையைத் தீர்வாகக் கொண்டுள்ள சூழ்நிலையில், இந்நிறுவனங்கள் இருக்கும் மிச்ச மீதியையும் கொள்ளையடிக்கத் திட்டமிடுவதோடு ஒத்திகையும் பார்த்து வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் மட்டும் விவசாயிகள் மற்றும் இதர கிராம மக்கள் தங்கள் ஆயுட்காப்பீட்டுக்காக எல்.ஐ.சி.யிடம் ரூ. 1000 கோடி அளவுக்கு பிரிமியம் கட்டியுள்ளார்கள். அண்மைக்காலமாக சந்தையின் வீழ்ச்சியாலும் வறட்சியாலும் பிரிமியத்தைத் தொடர்ந்து கட்ட முடியவில்லை. வாடிக்கையாளர்கள் மரணத்தை தழுவிக் கொண்டிருக்கும் நேரத்தில், விதிமுறைகளை காட்டி, மக்கள் கட்டிய ரூ. 1000 கோடியையும் எல்.ஐ.சி. விழுங்கிக் கொண்டு விட்டது. அரசு சார்ந்த நிறுவனத்திடம் சிக்கியவர்களின் நிலைமை இப்படியிருக்கும் பொழுது, பன்னாட்டு நிறுவனங்களிடம் ஏதேனும் எதிர்பார்க்க முடியுமா?
பதினைந்து ஆண்டுகளாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக, விவசாயிகள் வாழ்வுரிமை இழந்து குற்றுயிருடன் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இருக்கும் மிச்ச சொச்சங்களையும் கொள்ளையடிக்க கிராம வளர்ச்சி என்கிற போர்வையில் தன்னார்வக் குழுக்களும், நுண்கடன் நிறுவனங்களும் கிராமங்களை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன. ஆரம்ப காலத்தில் கடன் கொடுப்பதற்காக மட்டுமே உள்ளே நுழையும் நுண்கடன் நிறுவனங்கள் மெல்ல மெல்ல மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தன்மையையே சீரழித்து விடுகின்றன.
மாதாந்திர தவணைத் திட்டம் என்பது வங்கிகளும், அரசு நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவது. ஆனால் நுண்கடன் நிறுவனங்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக வாரம் வாரம் கடன் வசூல் செய்கிறார்கள்.
அதிகாலை, செங்கமங்கலான நேரத்தில் வாசல் தெளித்து கோலம் போடும் வேலைகளை முடித்தாலும், முடிக்காவிட்டாலும் நுண்கடன்களுக்கான தவணை கட்டி முடிக்க வேண்டும். ”காலக்கடன் கழிக்கிறோமோ இல்லையோ இவங்க வாரக்கடனை கண்டிப்பா கட்டணும்” என்று ஒரு பயனாளி . தனது வேதனையான அனுபவங்களை நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார்.
நுண்கடன் நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நடைமுறை விதிகளை நாம் படித்தால் நமக்கே தலைசுற்றும் ”ஏழைக்களுக்கான குறைந்த கடன் திட்டம்……..” ”சுலபத் தவணைகள்” ……. . ”உங்கள் வருமானம் ………. உங்கள் கையில் ……..” ”சிறுசேமிப்பு …….. சிறுகடன் …………சிறு காப்பீடு” ………….. என்றெல்லாம் இனிக்க இனிக்க மண்ணாங்கட்டித்தனமான வார்த்தைகளைப் பேசும் இவர்களது பொய்களை நம்பி பல மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஓட்டாண்டிகளாகி விடுகின்றன. பதினெட்டு விழுக்காட்டில் தொடங்கி முப்பத்தி ஆறு விழுக்காடு வரையில் வட்டி வசூல் செய்கிறார்கள். ஒரு தவணை அசலோ……வட்டியோ கட்டாவிட்டால் அதற்கு அபதாரம் கட்ட வேண்டுமாம்.
நுண்கடன் ஏழைகளின் பொருள் நுகர்வை உத்தரவாதப்படுத்த மட்டுமே பயன்படுகிறது என்பது இன்னொரு பொருளாதாரக் கணிப்பு. இயற்கைச் சீற்றங்களாலோ அல்லது பருவநிலை மாற்றங்களாளே வேளாண்மை பாதிக்கப்படுவது இயல்பு. அப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால் வேளாண்மையை நம்பி இருக்கும் மக்களிடம் நுகர்வுப் பொருட்கள் வாங்க காசுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். நுண்கடன் மூலம் அந்த இடைவெளியில் சூனியம் நிலவாமல் காப்பாற்ற முடியும். அரசாங்கம் வேறு கௌரவமான பயிர்ப் பாதுகாப்பு முறைகளை வடிவமைக்காமல் இருப்பதனால் நுண்கடன் மேல் வேளாண் குடிமக்களுக்கு அபரிதமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழைகளின் வருமானம் உயர வாய்ப்பு இல்லை. மாறாக அவர்களின் வருமானம் அவர்களுக்குள்ளேயே சுழல்கிறது. இதனால் அன்றைய தினத்தை /நிகழ்வை/குடும்பக் கனவைத் தள்ளி விட முடிகிறது. ஏதாவது நல்லது செய்ய ‘ஒரு கட்டுப் பணம்’ தேவை என்றால் அதற்கு நுண்கடனை எதிர்பார்த்து இருக்கும் ‘பற்று மனப்பான்மையும்’ இதனால் உருவாகிறது.
சுயஉதவிக் குழுக்கள் மூலம் நுண்கடன் வழங்குவதால் மட்டும் ஏழ்மை மறைந்து சமத்துவ சமூகம் மலர்ந்து விடாது. இது ஒரு தற்காலிக நிவாரணம். இதை முகமது யூனுசும் உணர்ந்து இருக்கிறார். எனவேதான் ‘கிராமீண்’ நுண்கடன் வழங்குவதோடு மட்டும் ‘அமைதி’ பெற்று விடவில்லை. காப்பீடு, வீட்டுவசதிக் கடன், மீன்பிடித் தொழிற்கடன், சிறுதொழிற்கடன், சூரிய ஒளித் திட்டம், கிராமத் தொலைபேசித் திட்டம் என்று பரந்துபட்ட வகையில் வங்கதேசத்தின் கிராமப் பொருளாதாரத்தில் தன் தலையீடுகளைச் செய்கிறது. ஆனால் நுண்கடன் மூலம் பலமான பொருளாதார அமைப்பை உருவாக்க முடியும் என்ற கனவு வீண். இவ்வளவு வெற்றி பெற்ற பிறகும் ‘கிராமீண்’ உட்பட சுய உதவிக் கூட்டமைப்புகளுக்கு அரசு பல்வேறு மானியங்களை வழங்குகிறது. மானியங்கள் தடைபட்டால் செயல்பாடுகள் நஷ்டக்கணக்கில் தான் ஓடும். எனவே ‘முட்டைத் தோடு பொருளாதாரம்’ பற்றிய எச்சரிக்கை எல்லோரையும் போல முகமது யூனுசுக்கும் இருக்கிறது. அவரது நேர் கொண்ட பார்வை நிலத்தினில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது.நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் துன்புறுத்தலால் நிகழ்ந்திருக்கும் மரணங்கள், ஊரை விட்டு வெளியேற்றம் போன்ற சம்பவங்களை முழுமையாக விசாரித்து உண்மையை அறிந்திட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இத்தகைய மரணங்களை வறுமையால் நடைபெற்ற தற்கொலை என காவல் துறை பதிவு செய்வதை தடுத்து உண்மையான காரணத்தை இணைக்க வேண்டும். என்பன உள்ளிட்டவை அந்த பரிந்துரைகள். நுண்நிதி நிறுவனங்கள் தோன்றியது என்பது ஏதோ தற்செயலான நிகழ்வல்ல. நவீன தாராளமயச் சூழலில் நிதித்துறைச் சீர் திருத்தங்கள் இவற்றின் தோற்றத்திற்கு வழி கோலின. நுண்நிதி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு பதிலாக வரவுள்ள புதிய மசோதா அல்லது ஆந்திர மாநிலத்தின் அவசரச் சட்டம் ஆகிய இரண்டுமே இத்தகைய நுண்நிதி நிறுவனங்கள் விதிக்கும் வட்டி விகிதத்திற்கு உச்சவரம்பினை விதித்திட மறுத்துவிட்டன. இந்த குறிப்பிட்ட பிரச்சனையை எடுப்பதுடன், மத்திய அரசு பின்பற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையையும் விவாதத்திற்கு உள்ளாக்கிப் போராட வேண்டும். இல்லையெனில் நமது தேசம் நுண்கடன் தருவோர்களின் பினாமி பூமியாக மாறிவிடும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.
(பசுமைத்தாயகம் சுற்றுச்சுழல் ஜனவரி2010)